சண்டிகர் மேயர்: மனோஜ் சோன்கர் ராஜினாமா! ஆனா, பாஜக போட்ட Sketch ஆல் AAP அதிர்ச்சி! திடீர் ட்விஸ்ட்!

சண்டிகர் மாநகராட்சி மேயர் மனோஜ் சோங்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் மனோஜ் சோங்கர்
பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் மனோஜ் சோங்கர்pt web

மாநகராட்சி மேயர் தேர்தல்

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரின் மாநகராட்சி மேயர் தேர்தலில் 36 மொத்த வாக்குகள் பதிவாகின. சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் I-N-D-I-A கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சண்டிகர் மேயர் தேர்தல், உச்ச நீதிமன்றம்
சண்டிகர் மேயர் தேர்தல், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகளை வைத்தது அக்கூட்டணி.

மேலும் அன்றைய தினம் வாக்குச் சீட்டில் நடைபெற்ற மோசடி குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சிக்குள்ளாக்கின. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் நீதிமன்றத்தை அனுகினர். உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

”ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல்” - தலைமை நீதிபதி

அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும் அவர், “ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் நான் இதனை பார்க்கிறேன். தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிகிறது. அவர் இப்படியா தேர்தலை நடத்துவது? நிச்சயமாக அந்த நபர் விசாரிக்கப்பட வேண்டும்.

சண்டிகர் மேயர் தேர்தல்
சண்டிகர் மேயர் தேர்தல்ani

செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது. ஆனால் இது எல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத் தெரியாதா? இவற்றை எல்லாம் உச்சநீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

மேயர் மனோஜ் சோங்கர் ராஜினாமா

தேர்தல் அதிகாரி பிப்ரவரி 19 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மேயர் மனோஜ் சோங்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இது குறித்து கூறியுள்ள இண்டியா டுடே செய்தி நிறுவனம், புது தில்லியில் மூத்த பாஜக தலைவர்களின் கூட்டம் நடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து கட்சி சோங்கரை ராஜினாமா செய்ய கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

பாஜகவில் இணைந்த ஆம்ஆத்மி உறுப்பினர்கள்

அதோடு இல்லாமல் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் குர்சரஞ்சித் சிங் கலா, நேஹா மற்றும் பூனும் தேவி ஆகிய மூன்று கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி தங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றம்சாட்டியும், பிரதமர் நரேந்திர மோடியின் பணியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வினோத் தாவ்டே இதுகுறித்து பேசுகையில், “சண்டிகர் கவுன்சிலர்கள் தங்களது கட்சி அவர்களை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக அவர்களை மதிக்கும். அவர்கள் சண்டிகரின் வளர்ச்சியில் துணை நிற்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் 20 பேர் வெற்றி பெற்றிருந்தனர். பாஜகவில் 14 பேர் வெற்றி பெற்றிருந்தனர். சிரோன்மணி அகாலி தளத்திற்கு 1 கவுன்சிலர் இருக்கிறார். இத்தகைய சூழலில் 3 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

புதிய தேர்தல் நடத்தப்படும்போது, பாஜக தரப்பில் 17 கவுன்சிலர்கள் இருப்பார்கள். பிஜேபி உறுப்பினரான சண்டிகர் எம்பி கிர்ரோன் கெர், சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் உத்தியோகபூர்வ உறுப்பினராகவும் வாக்குரிமை பெற்றுள்ளார். அவரும் பாஜகவிற்கு ஆதரவளிப்பார். ஆம் ஆத்மி 13 கவுன்சிலர்களைக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் உறுப்பினர் பலம் 10 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் எனும் நிலையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 17 உறுப்பினர்கள் இருப்பர். சிரோன்மணி அகாலி தளம் உறுப்பினர் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் சூழலில் பாஜகவின் பலம் 19 ஆக உயர்ந்து பெரும்பான்மையை எட்ட வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. அப்போது, குதிரைபேரம் நடக்க வாய்ப்புள்ளதால் தற்போது உள்ள நிலையில் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மீண்டும் தேர்தல் நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com