விபத்தில் மரணமடைந்த மராத்தான் வீரர்.. கனடாவிலிருந்து வந்த கார் டிரைவர் கைது!
உலகில் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் அதிக வயதானவர் என்ற பட்டத்தைப் பெற்றவர், ஃபெளஜா சிங் (114). இவர், 'டர்பனட் டொர்னாடோ' மற்றும் 'சீக்கிய சூப்பர்மேன்' என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் தனது பியாஸ் கிராமத்தைக் கடக்க முயன்ற ஃபெளஜா சிங் மீது, கார் ஒன்று மோதியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஃபௌஜா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த ஹிட் அண்ட் ரன் வழக்கு தொடர்பாக கனடாவைச் சேர்ந்த 30 வயது நபரை பஞ்சாப் காவல்துறை இன்று கைது செய்தது.
முதற்கட்ட தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்டவர் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து வந்ததாகவும், சமீபத்தில் கபுர்தலாவில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிஐ செய்தியின்படி, 26 வயதான அம்ரித்பால் சிங், போக்பூரில் இருந்து கிஷாகர்க்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் ஃபெளஜா சிங் மீது மோதியதாகத் தெரிகிறது. இதையடுத்து சிசிடிவி கேமராக்களின் தரவுகளைப் பயன்படுத்தி கிராமத்தில் பதுங்கியிருந்த அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர் ஃபௌஜா சிங் என்பது அப்போது தனக்குத் தெரியாது என்றும், புகழ்பெற்ற மாரத்தான் வீரரின் மரணம் குறித்து ஊடக அறிக்கைகள் மூலம் மட்டுமே தான் தெரிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது ஐந்தாவது மகன் குல்தீப் சிங் இறந்த துக்கம் தாங்காமல் அதிலிருந்து மீள்வதற்காக ஃபௌஜா சிங் ஓடத் தொடங்கினார். ஃபௌஜா சிங் லண்டன், டொராண்டோ மற்றும் நியூயார்க்கில் 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.