மம்தா பானர்ஜி கார் மீது கொடூர தாக்குதல்.. என்ன நடந்தது?
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் ஹலிசஹரில், காவல் துறை காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கட்சித் தொண்டரின் வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜியின் கார் மீது அடையாளம் தெரியாத குண்டர்கள் செங்கற்கள், கற்கள், சேறு, காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் வீசி தாக்கினர். ஜன்னல்கள் மூடியிருந்ததால் உயிர் தப்பியதாகவும், இது தன் உயிருக்கே ஆபத்தான தாக்குதல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர் - M.மீரா
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத குண்டர்கள் செங்கற்கள் மற்றும் கற்களைக் கொண்டு தனது கார் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதல் தனது உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தாக்குதலைக் கண்டித்துள்ள மாநில பாஜக, இந்த வன்முறையில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளது.
காவல்துறை காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படும் கட்சித் தொண்டர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஹலிசஹர் பகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் காரைச் சூழ்ந்துகொண்ட போராட்டக்காரர்கள், அதன் மீது சேற்றைப் பூசியதுடன், காலணிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் வீசியதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது, "திருடனை விரட்டுங்கள்" (Chor bhagao) என்ற முழக்கங்கள் அங்கு எதிரொலித்தன.
செங்கற்களும்், கற்களும் தன் மீது பட்டிருந்தால் தனக்கு என்னவாகியிருக்கும் என்று பானர்ஜி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். காவல்துறையினர் முன்னிலையிலேயே வெளியிலிருந்து வந்த சமூக விரோதிகள் என் கார் மீது கற்களை வீசினர். காரின் ஜன்னல்கள் மூடியிருக்காவிட்டால், அது என் தலையைப் பிளந்திருக்கும்; நான் உயிரிழந்திருக்கவும் கூடும். இதுபோன்ற ஒரு தாக்குதலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. எங்களைப் பாதுகாக்க காவல்துறை எதுவும் செய்யவில்லை; அவர்கள் பாஜக-வினருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
பானர்ஜியுடன் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் ஆகியோரும் சென்றிருந்தனர். காவல்துறையைப் பயன்படுத்தி சுவேந்து அதிகாரிதான் எல்லாவற்றையும் நிர்வகித்து வருகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

