பணம், நேரம், ஆற்றலை எடுத்துக் கொண்டு.. 1,000 பேரில் 12 பேருக்கே வேலை - ராகுல் காந்தி கேள்வி
செய்தியாளர் : M. மீரா
2027-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வேலையின்மை, தேர்வு வினாத்தாள் கசிவு, முடங்கியுள்ள பணி நியமனங்கள் உத்தரப் பிரதேச இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை பிரயாக்ராஜுக்கு சென்றார்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் முக்கிய மையமாகத் திகழும் பிரயாக்ராஜில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (Chhatron Ki Goonj’ programme (மாணவர்களின் குரல்) என்ற பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் இரண்டு லட்சம் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ”இந்தியாவின் சக்தியும் பெருமையும் இளைஞர்கள் என்று கூறி, இந்தியாவின் சுமார் 40 கோடி இளைஞர்கள் ஈடு இணையற்ற ஒரு தேசிய வளமாகத் திகழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சீனா, அமெரிக்காவை விட இந்தியாவின் 40 கோடி இளைஞர் சக்தியும் தரவுப் பயன்பாடுமே 21ஆம் நூற்றாண்டின் உண்மையான பொருளாதாரம். இருப்பினும், இத்தகைய மக்கள் தொகை சார்ந்த வலிமையை பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுவதில் நாடு தவறி வருகிறது.
இன்று இந்தியாவில் கல்விச் சான்றிதழ்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை; ஏனெனில், அவை வேலையைப் பெற்றுத் தருவதில்லை. மாணவர்கள் பல ஆண்டுகளைத் தேர்வுகளுக்குத் தயாராவதிலும், அதிகப்படியான பயிற்சி வகுப்புக் கட்டணங்களைச் செலுத்துவதிலும் செலவிடுகிறார்கள். ஆனால், இறுதியில் பாதுகாப்பான வேலையைப் பெறப் போராட வேண்டியுள்ளது.
1,000 பேரில் 12 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை கிடைக்கிறது. மீதமுள்ள இளைஞர்கள் முறைசாரா வேலைகள், gig வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற வாழ்வாதார முறைகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
இந்திய இளைஞர்களிடம் வேலை செய்வதற்கான விருப்பம் இல்லாதது பிரச்சனையல்ல, மாறாகப் போதுமான தரமான வேலைவாய்ப்புகள் இல்லாததே பிரச்னை. இந்த அமைப்பு உங்கள் பணம், நேரம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறது. ஆனால் உங்களுக்கு வேலையைத் தருவதில்லை. உற்பத்தித் துறையின் சரிவு, எளிதில் கிடைக்காத கடன்கள், வினாத்தாள் கசிவுகள், வேலைகளைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு - இவை அனைத்தும் இந்திய இளைஞர்களைப் பாதிக்கின்றன” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகப் பொருளாதாரம் மீதான தனது கடுமையான விமர்சனத்தையும் காந்தி மீண்டும் முன்வைத்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் 'ரீல்ஸ்' ஆகியவற்றை "21-ம் நூற்றாண்டின் போதை என்று அவர் வர்ணித்தார்.
மலிவான மொபைல் டேட்டா வசதிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் குறித்துக் கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, இளைஞர்கள் முடிவில்லாமல் திரையை scroll செய்துக் கொண்டே இருப்பதன் மூலம் திசைதிருப்பப்படுகிறார்கள், சிக்க வைக்கப்படுள்ளனர் என்றார்.
இளைஞர்கள் 'ரீல்ஸ்' காணொளிகளை உருவாக்கும்போதோ அல்லது பார்க்கும்போத, அதன் மூலம் கிடைக்கும் நிதிப் பலன்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கே செல்கின்றனவே தவிர, நேரடியாக இளைஞர்களின் கைகளுக்கு வருவதில்லை எனவும் பேசியிருக்கிறார்.

