பழம்பெரும் மலையாள இசையமைப்பாளரும் பாடகருமான ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் உயிரிழந்தார். 2 தினங்களுக்கு முன் சபரிமலையில் ஹரிவராசனம் விருது பெற்ற ஆலப்பி ரங்கநாத்தின் மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த ரங்கநாத், சொந்த ஊரின் பெயரிலேயே ஆலப்பி ரங்கநாத் என அழைக்கப்பட்டார். இசைக் குடும்பத்தில் பிறந்த அவர், இளம் வயதிலிருந்தே இசையின் மீது தணியாத ஆர்வத்தில் முறையாக இசையைக் கற்றவர். பரத நாட்டியமும் கற்றுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பனைப் போற்றி, மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏராளமான பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். கடந்த வெள்ளியன்று சபரிமலையில் நடைபெற்ற மகரவிளக்கு விழாவில், ஆலப்பி ரங்கநாத்துக்கு பெருமை மிக்க 'ஹரிவராசனம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 73 வயதான ஆலப்பி ரங்கநாத், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.