இணையத்தில் வைரலான National Crush.. ராணுவத்திற்கு Goodbye சொன்ன ரிஷப்.. திடீர் முடிவின் காரணம்?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். திரௌபதி முர்முவுடனான நிகழ்ச்சிகளில் அவர் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அதனால், ரிஷப் சிங் சம்ப்யால் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, மேஜர் ரிஷப்பின் மிடுக்கான தோற்றம் மற்றும் குடியரசுத் தலைவருடன் அவர் பணியாற்றிய விதம் தொடர்பான காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தன.
இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. அவருக்கு ‘National Crush’ என்ற பெயரும் சமூக வலைதளங்களில் பிரபலமானது. 2013-ஆம் ஆண்டு அவரது ராணுவப் பயணம் தொடங்கியது. அதன்பிறகு, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராக பணியாற்றினார். 2021-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், அப்போது கேப்டனாக இருந்த ரிஷப் சிங் சம்ப்யால் ஜாட் ரெஜிமென்ட் அணிவகுப்புக் குழுவை வழிநடத்தினார். அந்த அணிவகுப்புக் குழு சிறந்த அணிவகுப்புக் குழுவுக்கான விருதையும் வென்றது.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பொறுப்பை நிறைவு செய்துவிட்டு மீண்டும் ராணுவப் பணிக்குத் திரும்பியிருந்த மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால், தனது பணிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்திய ராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அவர், தற்போது தனது ராணுவப் பணிக்கு விடை கொடுத்துள்ளார். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான விரிவான அறிவிப்பு வெளியாகவில்லை. ராணுவப் பணிக்கு விடை கொடுத்துள்ள மேஜர் ரிஷப் சிங் சம்ப்யாலின் இந்த முடிவு, அவரைப் பின்தொடர்பவர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது அடுத்தகட்ட முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
