மகாராஷ்ட்ரா: ‘செல்ஃபோன் வாங்க முடியலயே..’ விபரீத முடிவெடுத்த மகன்... மனமுடைந்த தந்தையும்...💔
மகாராஷ்டிராவில் தனது தந்தையிடம் செல்ஃபோன் வேண்டுமென மகன் கேட்டநிலையில், அதை தந்தையால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மகன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அதைக்கண்ட தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
மகாராஷ்டிராவில் நாந்தேட்டில் கணவன், மனைவி, மூன்று பிள்ளைகள் என ஒரு அழகான குடும்பம் வசித்து வந்துள்ளது. இவர்களில் கடைக்குட்டிதான் ஓம்கார்.
16 வயதான ஓம்கார் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மகர சங்கராந்தியை முன்னிட்டு பள்ளி விடுதியிலிருந்து வீடு திரும்பியுள்ளார் அவர். அப்போதுதான் எதிர்ப்பாராத பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சம்பவத்தின்படி கடந்த வியாழக்கிழமை அன்று, ஓம்காரும் அவரது தந்தையும் பிலோலி தெஹ்சில், மினாகியில் உள்ள அவர்களது பண்ணையில் உள்ள மரத்தில் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
இதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான், திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, ஓம்கார் கல்வி நோக்கத்திற்காக தனது ஏழை விவசாயி தந்தையிடம் தொடர்ந்து செல்ஃபோன் வேண்டுமென கேட்டு நச்சரித்துள்ளார். ஆனால் தந்தையால் அதை வாங்கிக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.
ஓம்காரின் குடும்பத்தார் அளித்த வாக்குமூலத்தில், “புதன்கிழமை மாலையன்று, ஓம்கார் செல்ஃபோன் வேண்டுமென தொடர்ந்து அவனது தந்தையிடம் நச்சரித்தார். பண்ணை, வாகனத்திற்கு வாங்கிய கடன் போன்றவற்றால் கடும் நிதி நெருக்கடியில் அவரது தந்தை இருந்ததால், அவரால் ஸ்மார்ட்ஃபோன் வாங்கித்தர முடியவில்லை” என்று தெரிகிறது.
இதனால், மனமுடைந்த ஓம்கார், வீட்டை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை ஆகியும் அவர் வீடு திரும்பாததால், அவரை தேட சென்ற குடும்பத்தினர், பண்ணை வீட்டில் இருந்த மரத்தில் ஓம்கார் தூக்கில் தொடங்கியபடி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்த ஓம்காரின் தந்தை, விரகத்தியில் தனது மகன் இறந்த அதே தூக்குகயிற்றைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையையும் முடித்துக்கொண்டுள்ளார். மகன் - தந்தை என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)