ம.பி. | மேடையில் மணப்பெண் கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்! கடத்தலுக்கு பின் சோகம்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் (கிதோலா) கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. பகுதிநேர ஆசிரியராகவும் விவசாயியாகவும் பணிபுரிந்த 45 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதே மன உளைச்சலில் இருந்த இந்திரகுமார், கடந்த மே மாதம் சிஹோராவுக்கு அருகிலுள்ள ரிவன்ஜா கிராமத்தில் பிரபலமான குரு அனிருத்தாச்சாரியா மகாராஜ் நடத்திய ஆன்மீக சொற்பொழிவில் கலந்துகொண்டார். அப்போது அவர், ”எனக்கு 18 ஏக்கர் நிலம் சொந்தமாய் உள்ளது. ஆனால், தனது சொத்தைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. ஆகையால் தனக்கு ஒரு மணப்பெண் தேவை” என தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், அங்கே அறிவுரை வழங்குவதற்குப் பதிலாக, அவரைப் பற்றி கிண்டலடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலானது. இதற்கிடையே அவரைக் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக காணாததால், கிராமத்தினர், உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே, ஜூன் 6ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதர்களில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், சாஹிபா பானோ என்ற பெண் ’குஷி திவாரி’ போல் மாறுவேடமிட்டு சமூக ஊடகங்கள் மூலம் திருமணத்திற்காக அந்த நபரை அணுகியது தெரியவந்தது. இந்திரகுமாரும் சாஹிபாவும் படிப்படியாக ஒருவருக்கொருவர் பழகத் தொடங்கியதற்குப் பிறகு சாஹிபா தன் கூட்டாளிகளுடன் இணைந்து மோசடிக் கும்பல் இந்திரகுமாரை உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்கு அழைத்துள்ளார். இந்திரகுமாரும், சாஹிபானோவின் வார்த்தையை நம்பி கோரக்பூரை அடைந்தார். அங்கே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளிகளும் அவரைக் கொன்றுவிட்டு, அவர் வைத்திருந்த சில நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து குஷிநகர் காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தோஷ் குமார், ”இந்த வழக்கு தொடர்பாக சாஹிபா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலி ஆதார் அட்டையையும் தயாரித்துள்ளார். மீதமுள்ள நபர்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. விரிவான விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.