ம.பி. | பாஜக Ex எம்.எல்.ஏ. வீட்டில் 3 முதலைகள்.. வருமானவரித் துறையினர் அதிர்ச்சி!
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். சாகரில் வசிக்கும் இவர் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஆவார். அதே சாகரில் வசிப்பவர் முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி. இவர்கள் இருவரும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 155 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 3 கோடி ரொக்கமும், கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹர்வன்ஷுடன் இணைந்து பீடி வர்த்தகம் நடத்திய ராஜேஷ் மட்டும் ரூ.140 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதுதொடர்பான ஆவணங்கள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ராஜேஷ் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்யப்படாத கார்களும் இருப்பது தெரிய வந்தது. பினாமி பெயரில் கார்கள் வாங்கியிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போக்குவரத்துத் துறையிடம் கார்கள் தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் கோரியுள்ளனர். இந்தக் கார்கள் எங்கிருந்து வந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர, ஹர்வன்ஷ் வீட்டின் குளத்தில் 3 முதலைகள் இருப்பதைக் கண்டு, வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஹர்வன்ஷ் வீட்டில் முதலைகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது வீட்டில் முதலைகள் வளர்க்கப்பட்டது ம.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2013 சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்தோர், மாவட்டத் தலைவர் பதவிக்கும் வலுவான போட்டியாளராக இருந்தார். இவரது தந்தை ஹர்னாம் சிங் ரத்தோர் மத்தியப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.