மத்தியப் பிரதேசத்தில் எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் வர்கியாவின் தந்தையும் மத்திய பிரதேச நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சரான கைலாஷ் விஜய்வர்கியா 2010 முதல் 2020 வரை இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் விஜய்வர்கியா, கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரிகளை, கிரிக்கெட் மட்டையால் தாக்கி விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-3 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்தது. இதனை சரிசெய்வதற்காக, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்றுள்ளனர். அப்போது அங்குச் சென்ற கைலாஷ் விஜய் வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'அப்போது 5 நிமிடத்தில் அதிகாரிகள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு'' என்று எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்டினார்.
இந்த சம்பவம் வீடியோ காட்சியாக சமூகவலை தளத்தில் வைரலானது. அதிகாரிகள் எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா மீது வழக்கு தொடுத்தனர். அதன்படி, அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் ஜாமீன் கிடைக்கும்வரை ஆகாஷ் விஜயவர்ஷியாவும் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியான அவருக்கு, தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அதிகாரியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை மீண்டும் பேட்டை எடுக்கும் வாய்ப்பு ஏற்படாது’ என்றார்.