கர்நாடகா | பாஜக பிரமுகர் கொலை வழக்கு.. காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட 16 பேருக்கு ஆயுள்!
2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பாஜகவின் யோகேஷ் கவுடா, தனது ஜிம் வாசலில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் அப்போதைய அமைச்சராக இருந்த வினய் குல்கர்னிக்கும் இடையே இருந்த அரசியல் பகையே காரணம் எனப் புகார்கள் எழுந்தன.
தொடக்கத்தில் மாநில காவல்துறை விசாரித்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் வினய் குல்கர்னிக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் 2020-இல் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உட்பட 16 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருந்தது. தொடர்ந்து, இதற்கான தண்டனை விவரங்கள் வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில்தான், இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் அமர்வு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சிபிஐ தரப்பில் இருந்து, ’குற்றவாளிகள் அனைவருக்கும் எவ்வித மன்னிப்பும் இல்லாத ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட வினய் குல்கர்னி மற்றும் ஏனைய 15 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ₹30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றதால், வினய் குல்கர்னி தனது எம்.எல்.ஏ பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

