கேரளா | ”தினமும் காலை 3 மணிக்கே கூவி என் தூக்கத்தைக் கெடுத்தது அந்த சேவல்”.. முதியவர் அளித்த புகார்!
மனித உடலுக்கு தூக்கமும் இன்றியமையாததாகிறது. உழைப்புக்கேற்ற ஓய்வு இல்லையெனில், உடல் நலம் பாதிக்கப்படும். அதனாலேயே பலர், தங்களது தூக்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சிலரோ தூக்கமின்றிச் சிரமப்படுகின்றனர். அதற்காக சிகிச்சையும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், ஒருவரின் தூக்கத்தைக் கெடுத்ததற்காக, சேவல் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா குரூப். இவருக்கும் இவரின் அண்டை வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு நிலமோ அல்லது பணமோ காரணமல்ல. சேவல் ஒன்றால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணாவின் அண்டை வீட்டாரான அனில் குமார், சேவல் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் ராதாகிருஷ்ணா அவதிப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமான நோயால் அவதிப்பட்டுவரும் ராதாகிருஷ்ணா, இரவில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அதிகாலையில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான ராதாகிருஷ்ணா அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) புகார் அளித்துள்ளார். ‘தினமும் அதிகாலையில் அந்தச் சேவல் கூவுவதால் தூங்க முடியவில்லை’ எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ராதாகிருஷ்ணா, அனில் குமார் ஆகிய இருவரையும் வைத்து விசாரணை நடத்தி தீர்வு காண முயன்றனர். இதில், அனில் குமார் வளர்த்துவரும் சேவல் வீட்டின் மாடியில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே, சேவல் கூவுவது மற்றவர்களுக்கு இரைச்சலாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த முதியவரைப் பாதிக்காத வகையில், மாடியின் தெற்குப் பகுதியில் சேவலுக்கு தனிக் கூடாரம் அமைக்க வேண்டும் என அனில் குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்காக 14 நாள்களை கெடு விதித்துள்ளனர். தூக்கத்தைக் கெடுத்த சேவல் மீது புகார் கொடுத்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.