அயோத்தி ராமர் கோயில் | தொழுகை நடத்த முயன்ற காஷ்மீர் நபரால் பரபரப்பு.. கைதுசெய்து விசாரணை!
அயோத்தியில் உள்ள ராமர் மந்திர் வளாகத்திற்குள் தொழுகை நடத்த முயன்றதாகக் கூறி, காஷ்மீரைச் சேர்ந்த அகமது ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டவுள்ள இக்கோயிலைக் காணவும், பக்தி பரவசத்தில் மூழ்கவும் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அங்கு நாள்தோறும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் மந்திர் வளாகத்திற்குள் தொழுகை நடத்த முயன்றதாகக் கூறி, காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் அவர், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 55 வயதான அந்த நபர், உயர் பாதுகாப்பு கோயில் வளாகத்திற்குள் நேற்றைய தினம் நுழைந்து, கோயிலுக்குச் சென்ற பிறகு, சீதா ரசோய் பகுதிக்கு அருகில் அமர்ந்து, அங்கு தொழுகை நடத்தத் தயாரானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயில் பணியாளர்களால் அவர் கைது செய்யப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, அவர் கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது கூற்றையும் அறிந்துகொள்ள போலீசார் மருத்துமனை உதவியை நாடியுள்ளனர். எனினும், அவர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் அவர் அயோத்தி ராமர் கோயிலுக்குள் நுழைந்ததற்கான காரணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா எனபதையும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அடுத்த வாரம் அயோத்தியில் மகர சங்கராந்தி கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ள நிலையிலும், ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோயில் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

