”நான் என் வாக்கை காப்பாற்றினேன்; எம்பி பதவி வேண்டாம்” - முதல்வர் பதவியிலிருந்து விலகிய சித்தராமையா!
2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் ஜி.பரமேஷ்வர் ஆகிய 3 பேர் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், கட்சியில் ஏற்பட்ட நீண்ட இழுபறிக்குப் பிறகு, சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார்.
இந்தசூழலில் தான், கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் கடந்ததிலிருந்தே, சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கி வந்தனர். இதன்காரணமாக, நேற்றைய முன் தினம் டெல்லியில், கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் தான், இன்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடித்தத்தை அம்மாநில ஆளுநர் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், அவரது செயலரிடம் அளித்திருக்கிறார். இதன்மூலம், விரைவில் டி.கே. சிவகுமார் கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இன்று காலை சித்தராமையாவின் இல்லத்தில் காலை உணவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார், சித்தராமையாவில் காலில் விழுந்து ஆசி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் செயலரிடம் ராஜினாமா மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள சித்தராமையா, ”கர்நாடகாவுக்கு சேவை செய்ய கட்சி எனக்கு இரண்டு முறை வாய்ப்புகளை வழங்கியது. இம்முறை எனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் என்னிடம் கேட்டுக்கொண்டது. நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். தற்போது நான் எனது வாக்கை காப்பாற்றிவிட்டேன். அதேசமயம், எனக்கு மாநிலங்களவை செல்ல விருப்பமில்லை எனவும் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். எனது கடைசி மூச்சு வரை கர்நாடக அரசியலில் தான் இருப்பேன்.

