டெல்லி| ஜேஎன்யு துணைவேந்தர் சர்ச்சை கருத்து.. மாணவர்கள் போராட்டம் தீவிரம்!
ஜேஎன்யு துணைவேந்தர் சர்ச்சைக்குரிய கருத்துகளை எதிர்த்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர் இந்திய தலித் மக்களை அமெரிக்க கறுப்பின மக்களுடன் ஒப்பிட்டுப் பேசியது மாணவர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட்டின் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய துணைவேந்தர், "எப்போதும் தங்களை பாதிக்கப்பட்டவர்களாகவே காட்டிக்கொள்பவர்கள் முன்னேறமுடியாது" என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்க கறுப்பின மக்களுடன் இந்திய தலித் மக்களை ஒப்பிட்டுப்பேசினார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய சமத்துவ விதிமுறைகள் தேவையற்றது மற்றும் பகுத்தறிவற்றது என்றும் அவர் விமர்சித்தார்.
துணைவேந்தரின் இந்தப் பேச்சு "சாதியவாதத் தன்மையுடையது" என குற்றம்சாட்டும் மாணவர்கள், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தசூழலில் தனது கருத்துகள் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டதாகத் துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

