பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம்? இண்டிகோ அளித்த புது விளக்கம்! குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 10,000 மதிப்பிலான பயண ரசீதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடந்த வாரத்தில் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக அந்த விமானச் சேவை, அதன் நெட்வொர்க்கில் உள்ள 138 இடங்களுக்கும் தடையின்றி 1,900-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தையும் அவர்களின் உடைமைகளையும் திருப்பித் தந்ததாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், சேவைகள் ரத்து தொடர்பாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தனது தரப்பு கருத்தைத் தெரிவித்திருந்தது.
எனினும், இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க அவ்வமைச்சகம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டளையிடப்பட்ட 10% செயல்பாடுகளைக் குறைப்பதற்கு இணங்க, அதன் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய அரசையும், இண்டிகோ நிறுவனத்தையும் கடுமையாகச் சாடியது. தவிர, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக நிவாரணத் தொகை அளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இண்டிகோ நிறுவனம், கடுமையான பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றால் என்ன என்பதையும், இழப்பீடு வழங்குவதற்காக வாடிக்கையாளர்களை எவ்வாறு அடையாளம் காணும் என்பதையும் இண்டிகோ குறிப்பிடவில்லை.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்குத் தேவையான பணத்தைத் திரும்ப வழங்குவதை ஏற்கெனவே உறுதி செய்துள்ள நிறுவனம், "டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பயணம் செய்த எங்கள் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் சில விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்ததையும், அவர்களில் பலர் நெரிசல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டதையும் இண்டிகோ வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறது. அவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாங்கள் வழங்குவோம்" என அந்த நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்த பயண வவுச்சர்களை அடுத்த 12 மாதங்களுக்குள் எந்தவொரு எதிர்கால இண்டிகோ பயணத்திற்கும் பயன்படுத்தலாம்" என்றும் அது மேலும் கூறியுள்ளது.

