தாக்கப்பட்ட கப்பல்.. எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்.. உயிரைப் பணயம்வைத்த இந்தியர்கள்!
ஓமன் கடற்கரையில், ஏவுகணை தாக்குதலுக்குள்ளான ஒரு கப்பலில் இருந்து இந்திய அதிகாரிகள், வெடிக்காத ஒரு போர்க் குண்டத்தை மீட்டெடுத்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில், அங்கு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் வர்த்தகக் கப்பல்கள் பெருமளவில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற கடல் கண்ணிவெடித் தாக்குதல்களால் விபத்தைச் சந்திக்கின்றன. அந்த வகையில், ஓமனில் இந்திய மாலுமிகளைக் கொண்ட கப்பல்கள் மீதும் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட 3 கப்பல்கள் இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஒரு கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, இந்தியா கடுமையான கணடனத்தைப் பதிவு செய்தது. இந்த நிலையில், தாக்கப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலிலிருந்து வெடிக்காத ஏவுகணைப் போர்க்குண்டத்தை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மே 26ஆம் தேதி, எம்டி ஒலிம்பிக் லைஃப் என்ற எண்ணெய்க் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து கொச்சிக்குப் புறப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல், ஓமனின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ளது. கப்பல் இடதுப் பக்கத்தில் தாக்குதலுக்கு உள்ளானபோதிலும், அது, தனது பயணத்தைத் தொடர்ந்தது. அதேநேரத்தில், கப்பலில் வெடிக்காத ஏவுகணை ஒன்று இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அது எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடியதாக இருந்தது. அதற்குள் அந்தக் கப்பல் கிட்டத்தட்ட 2000 கி.மீ. தூரத்தைக் கடந்திருந்தது. இதற்கிடையே, அதை அகற்றுவதற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் ஒருங்கிணைப்பு மையம் (IFC-IOR) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, கொச்சியைத் தளமாகக் கொண்ட தெற்கு கடற்படைக் கட்டளையகம், வெடிபொருள் அகற்றும் (EOD) சிறப்பு நிபுணர் குழுவை களமிறக்கியது. பின்னர், பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்ட பிறகு, நிபுணர்கள் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட அந்தப் போர்க்குண்டம் தற்போது விரிவான பரிசோதனைக்காக ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கப்பலில் வெடிக்காத போர்க்குண்டத்தை இந்திய அதிகாரிகள் மீட்டெடுத்திருப்பது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

