உலகின் மகிழ்ச்சியான நகரங்கள்.. 6ஆவது இடம்பிடித்த இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம்!
நாடுகளில் உள்ள பல நகரங்களில் சில நகரங்கள் மட்டும், ஏதோ ஒன்றுக்காக அதன் பட்டியலில் இணைந்துவிடுகிறது. அந்த வகையில், உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் என்ற சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஒரு மதிப்புமிக்க நகரமும் அதில் இடம்பிடித்துள்ளது. அது, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் ஆகும். டைம் அவுட் வெளியிட்ட , 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில்தான், இந்த நகரம் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ள இந்த இளஞ்சிவப்பு நகரம், அதன் செழுமையான தேசி உணவு, புகழ்பெற்ற அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றிற்காகப் பிரபலமானது.
மேலும், இது வடஇந்திய மக்களால் மிகவும் விரும்பப்படும் வார இறுதிப் பயணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்தப் பட்டியலில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றது. இந்த ஆண்டு பட்டியலில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பனாமாவின் பனாமா சிட்டி, மெக்சிகோவின் குவாடலஹாரா, கொலம்பியாவின் மெடலின் மற்றும் போலந்தின் கிராகோவ் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 24,000 மக்களிடம் ’டைம் அவுட்’ நடத்திய வருடாந்திர உலகளாவிய கணக்கெடுப்பின்போது நகரங்களின் இரவு வாழ்க்கை, உணவு, சமூக உணர்வு, காதலைக் கண்டறிவது எவ்வளவு எளிது, மற்றும் அந்த நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.

