காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலோட் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் சபாநாயகர் பதவியை பாஜக வைத்துக்கொள்ளும் பட்சத்தில் தங்கள் எம்.பி.க்கள் விலைபேசப்படுவதை தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பார்க்க வேண்டியிருக்கும் என கெலோட் தெரிவித்துள்ளார்.
பல மாநில சட்டப்பேரவைகளில் சபாநாயகரின் முடிவால் அரசுகள் கவிழ்ந்து கட்சிகள் உடைந்ததையும் இவ்விரு கட்சிகளும் உணர வேண்டும் என்றும் கெலோட் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் சபாநாயகர் பதவி இரு கூட்டணி கட்சிகளில் ஒன்றிற்கு தரப்பட வேண்டும் என்றும் கெலோட் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கூட்டணி அரசுகள் அமைந்தபோது தெலுங்குதேசம், சிவசேனா, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டதையும் அசோக் கெலோட் சுட்டிக்காட்டியுள்ளார்.