ரூ.5000... வீட்டு வாடகை தொடர்பான விவகாரம்; வீட்டு உரிமையாளரின் விரலையே கடித்த அதிர்ச்சி சம்பவம்!
மமதா என்ற பெண்ணும், அவரது கணவர் ஹேமந்த் என்பவரும் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஜவஹர்நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். அந்த வீடு சுஜிதா என்ற பெண்ணிற்கு சொந்தமானது.
இந்தநிலையில், மமதாவும் அவரது கணவரும் ஏப்ரல் மாதம் வீட்டை காலி செய்து, தங்கள் தோழி சுப்ரியாவை வாடகைக்கு எடுக்க பரிந்துரைத்தனர். வீட்டிற்கு குடிபெயர்ந்த சுப்ரியாவும் ஒரு மாதம் தங்கிய பிறகு, திடீரென வாடகை எதுவும் செலுத்தாமல் வெளியேறினார்.
இந்தநிலையில், தனியார் சீட்டு நிதி நிறுவனத்தை நடத்தும் மமதா, மே 17 அன்று, சுஜிதாவை அழைத்து, மாதாந்திர தவணையை செலுத்துமாறு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் சுஜிதா சீட்டிற்கு ரூ.30,000 பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், மமதாவின் தோழி சுப்ரியா வாடகை செலுத்தாததால், ரூ.5,000 கழித்து, மீதமுள்ள தொகையை அவர்களுக்கு வழங்குவதாக மமதாவிடம் சுஜிதா கூறியதாக தெரிகிறது.
ஆனால், இதனால் ஏற்றுக்கொள்ளாத மமதா மற்றும் அவரது கணவர் உடனடியாக பணத்தை தரும்பும்படி வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், சுஜிதா மறுக்கவே, மமதாவிற்கும் சுஜிதாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்ட சுஜிதாவின் தாய் லதா சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
மறுபுறம் ஆத்திரமடைந்த மமதாவின் கணவர் ஹேமந்த் லதாவின் வலது ஆள்காட்டி விரலைக் கடித்துள்ளார். இதனால் , விரல் இரண்டாக துண்டித்துப்போனது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், விரலை மீண்டும் இணைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சுஜிதா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க, மதுரா நகர் போலீசார் ஹேமந்தின்மீது வழக்குப்பதிவு செய்தநிலையில், அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.