கர்நாடகா | ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த நவம்பர் 20ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவ்வறிவிப்பின் மூலம், நாட்டிலேயே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியது.
இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்புக்கு ஊதியமும் வழங்கப்படும். வருடத்திற்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை. ஆனால் அந்தந்த மாத விடுப்புகளை அந்த மாதங்களிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்துவைத்து எடுக்கக்கூடாது. இதற்கு எந்த மருத்துவச் சான்றிதழும் சமர்பிக்க தேவையில்லை எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 3.5 முதல் 4 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வீட்டு வேலை செய்பவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், டெலிவரி பணியாளர்கள் போன்ற அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் சுமார் 60 லட்சம் பெண்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த திட்டத்தை அமைப்புசாரா துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கெனவே மாதவிடாய்க்கு விடுப்பு வழங்குகின்றன. இந்தியாவிலும் பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள், அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாள் விடுப்பு வழங்குகின்றன. எனினும், கர்நாடகாவின் மாதவிடாய் விடுப்புக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த அவிராட்டா ஏஎஃப்எல் இணைப்பு அமைப்புகள் லிமிடெட் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்கள் மீது நீதிபதி ஜோதி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.
"மாதவிடாய் சுழற்சியின்போது விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலன் தொடர்பான எந்த தனிச்சட்டமும் இல்லை. எனவே பல்வேறு தொழிலாளர் சட்டங்களின்கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஓர் அறிவிப்பின் மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை" என்ற வாதத்தை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.
மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025 மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அரசின் ஆணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிபதி, மாதவிடாய் விடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

