ராஜஸ்தான் | ரூ.80,000 கோடியில் சுத்திகரிப்பு ஆலை.. பிரதமர் திறந்து வைக்கவிருந்த நிலையில் தீ விபத்து!
ராஜஸ்தான் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா நகரில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியால், ரூ. 80 ஆயிரம் கோடி செலவில், புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகமாகும்.
இதன் மூலம் பெட்ரோகெமிக்கல் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, அன்னியச் செலாவணியைச் சேமிக்க முடியும். குறிப்பாக, ராஜஸ்தானில் உற்பத்தியாகும் மங்களா கச்சா எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்துவதோடு, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயையும் சுத்திகரித்து டீசல், பெட்ரோல் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்களை வழங்கும். இந்நிலையில், இத்திட்டம் இந்தியாவின் எரிசக்தித் துறையில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
இத்திட்டம், 2013 செப்டம்பர் 22 அன்று சோனியா காந்தியால் இந்த சுத்திகரிப்பு ஆலைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் ஆரம்ப மதிப்பீட்டுச் செலவு ரூ. 37,230 கோடியாகும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி 2018 ஜனவரி 16 அன்று, திட்டச் செலவை ரூ. 43,129 கோடியாகத் திருத்தி, இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். இதற்கான கட்டுமானப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இத்திட்டத்திற்கு இதுவரையிலான மொத்த செலவு ரூ.79,450 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான இறுக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 21) பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திறப்பு விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, திறப்பு விழாவுக்கான பாதுகாப்பு பணிகளை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இன்று மாலை ஆய்வு செய்யவிருந்தார். இந்த சூழலில் தான், இன்று மதியம் மணியளவில் சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தால் சுத்திகரிப்பு ஆலை வளாகம் முழுவதும் கருப்பு புகையால் சூழ்ந்து காணப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்டிருந்த சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததுடன், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

