சூதாட்டச் செயலி விளம்பரம் |பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 29 பேர் மீது ED வழக்குப்பதிவு!
பொதுமக்களை ஏமாற்றும் வகையில் சில சூதாட்டச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூதாட்ட செயலிகள் பிரபல நடிகர்கள், நடிகைகள், யூடியூபர்களை கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தச் செயலிகளால் இளைஞர்கள் முதல் பெண்கள் வரை எனப் பலரும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூதாட்டச் செயலிகள் மூலம் விளம்பரம் செய்ததாக மொத்தம் 29 திரைப்பட பிரபலங்கள் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் மேற்கண்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் மஞ்சுலட்சுமி, நிதிஅகர்வால், அனன்யாநாகல்லா, முகி மற்றும் நீது அகர்வால், விஷ்ணுபிரியா, வர்ஷினி, சிரி ஹனுமந்து மற்றும் வசந்திகிருஷ்ணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தெலங்கானாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்த உதவிய குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் நேரில் விசாரணைக்கு அழைத்து, செயலிகளைப் பிரபலப்படுத்த வாங்கிய பணம், அவை பரிவர்த்தனை செய்யப்பட்ட விதம் மற்றும் அது தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் போன்றவை குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர், நடிகைககள், யூடியூபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.