தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R பணிகள்., முழு விவரத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் !
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வாக்களர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான முழு விவரங்களை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. முன்னதாக, பிகாரில் S.I.R ன் மூலம் 30 லட்சம் பேர் நீக்கியதற்கு திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட S.I.R அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கோவா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (அக்டோபர் 28) முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தேர்தல் அதிகாரிகளுக்கு SIR தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்றும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 தேதி வரை வாக்காளர்கள் இல்லங்களுக்குச் சென்று வாக்காள பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல்கள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்படும். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல்களை தெரிவிக்கலாம். பின்னர், ஜனவரி 31ஆம் தேதி வரை வாக்காளர்களின் குறைகளை கேட்கும் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுடைய விண்ணப்பங்களை சரி பார்க்கும் நடவடிக்கைகள் நடைபெறும். இறுதியாக பிப்ரவரி 7-ம் தேதி அன்று சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அடையாளச் சான்றாக ஆதார், பாஸ்போர்ட், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 12 ஆவணங்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

