முதலமைச்சரை தீர்மானிப்பது ஆளுநரா..? இதற்கு முன்பு பிரச்னையாக உருவெடுத்த 2 நிகழ்வுகள்.!
இந்திய அரசியலமைப்பின் 164,165 பிரிவுகளின்படி முதலமைச்சர் ஆளுநரால் பதவியில் அமர்த்தப்படுகிறார்; ஆனால் அவரை தேர்வு செய்வது சட்டமன்றமே. அமைச்சரவை சட்டமன்றத்திற்கு கூட்டு பொறுப்புடையது; பெரும்பான்மை நிரூபிக்கும் வரை பதவியில் தொடரும். ஆளுநர் தனிச்செயலால் முடிவெடுக்க முடியாது; ஜனநாயகத்தின் மையம் மக்களின் தேர்வும் சட்டமன்ற நம்பிக்கையும் தான்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும், 164வது பிரிவின் படி, ஆளுநரால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்படுகிறார். மற்ற அமைச்சர்கள், முதலமைச்சரின் பரிந்துரையின்படி ஆளுநரால் பதவியில் அமர்த்தப்படுகின்றனர். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், ஆளுநரால், முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்படுகிறாரே தவிர நியமிக்கப்படவில்லை.
ஆளுநரால் நியமிக்கப்படுபவராக முதலமைச்சர் இருந்தால் அதற்கான தகுதி வரையறைகளை ஆளுநரே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், முதலமைச்சராக அமரும் நபரின் தகுதி வரையறைகளை ஆளுநர் தீர்மானித்துக் கொள்ள முடியாது. காரணம் அவர் இந்திய அரசியலமைப்பின் படி மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என்பதே ஜனநாயகத்தின் உண்மை. முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் ஆளுநர் விருப்பம் உள்ள வரை பதவியில் இருப்பார்கள்.
அதாவது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும், Pleasure of the Governor எனப்படும் ஆளுநர் விரும்பும் வரை தான் அமைச்சரவை பதவியை ஆற்ற முடியும்.ஆளுநர் விழையும் வரை என்பதன் காரணமாக ஆளுநர் தனது உளத்தேர்வின் படி தன்னிச்சையாக செயல்பட மாட்டார், செயல்படவும் கூடாது.
அதே போல், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 165ன் கீழ், அமைச்சரவை என்பது அந்தந்த மாநில சட்டமன்றப் பேரவைக்கு கூட்டு பொறுப்புடையதாக இருக்க வேண்டும் என்று வரையறைக்கப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை சட்டப்பேரவைக்கு மட்டும் பொறுப்புடையதாக இருக்க வேண்டும். சட்டமன்ற பேரவையின் நம்பிக்கையினை பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டமன்றப் பேரவை அந்த அமைச்சரவை மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், ஆளுநரால் பதவியில் அமர்த்தப்பட்ட முதலமைச்சர் தொடர்வார்.
அதாவது சட்டமன்றத்திற்குள் பெரும்பான்மையை ஒரு கட்சியும், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அதன் தலைவரும் நிரூபித்து நம்பிக்கையை பெற்றிருக்கவேண்டும். எனவே, இந்திய அரசியலமைப்பின் படி, சட்டமன்ற பேரவை தான் முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களை தேர்வு செய்கிறது. 118 உறுப்பினர்கள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடமும் பேரவை தானே தவிர ஆளுநர் மாளிகை இல்லை என்று அரசியலமைப்பும் நீதிமன்றமும் தெளிவுப்பட தெரிவித்துள்ளது. அதற்கு வரலாற்று உதாரணமாக அமைத்ததுதான் எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு.
1988-ல் கர்நாடக மாநில முதலமைச்சரக இருந்த ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மைக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி, ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. தனக்கு பெரும்பான்மை இருப்பதைச் சட்டசபையில் நிரூபிக்க பொம்மை வாய்ப்பு கேட்டார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஆட்சி கலைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாநில சுயாட்சியைப் பாதுகாக்கும் விதமாக அமைந்தது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது என்றும், அது Floor Test எனப்படும் சட்டமன்ற வாக்கெடுப்பு மூலமே உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பு திட்டவட்டமாக அறிவித்தது.
மேலும், சட்டப்பிரிவு 356-ன் கீழ் மாநில அரசுகளைக் கலைக்கும் மத்திய அரசின் அதிகாரம் தன்னிச்சையானது அல்ல என்றும், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கும் சூழலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்தக் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதே பொம்மை வழக்கின் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

