கர்நாடகா | கிளம்பிய புகை.. மீண்டும் சூடுபிடிக்கிறதா முதல்வர் யுத்தம்.. என்ன காரணம்?
கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதல்வரைத் தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னர், ஒருவழியாக சித்தராமையா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி கழிந்த நிலையில், தற்போது முதல்வர் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது.
”கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும்” என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்தார். இந்நிலையில் சிவக்குமாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், ”கர்நாடகாவின் முதலமைச்சராக இன்னும் 2 முதல் 3 மாதங்களில் D.K.சிவக்குமார் பதவியேற்க வாய்ப்புள்ளது” கூறியிருப்பது கவனம் பெறுகிறது. ஆனால் சித்தராமையா தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்வார் என அவரது மகன் யதீந்திரா கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தின்போது கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவராஜு ஷிவகங்கா, ”வரும் டிசம்பருக்குள் டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் எனவும், இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” எனவும் கூறியிருந்தார். அதேபோல், டி.கே.சிவகுமாருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ”டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.