நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு.. டெல்லி தொழிலதிபர் எடுத்த முடிவு!
இந்தியாவில் எத்தனையோ சட்டங்கள் உருவாக்கப்பட்டபோதும், இன்னும் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களும் வரதட்சணைக் கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டிருப்பது என்பது வேதனையான விஷயமாக உள்ளது. அதேநேரத்தில், சமீபகாலமாக ஒருசில பெண்கள் சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது வரதட்சணை மற்றும் வன்முறை புகார் அளித்து வருவது அதிகரித்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் உபியைச் சேர்ந்த நபர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை குறித்த புகார் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தம்பதி ஒருவர் விவாகரத்து கோரி பிரிந்து இருக்கும் நிலையில், கணவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் இணை நிறுவனர் புனித் குரானா. இவர், மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குரானா, கடந்த 2016ஆம் ஆண்டு மனிகா ஜகதீஷ் பஹ்வா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வணிகம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இருவரும் சேர்ந்து ஹோட்டலை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே புனித்தின் மனைவி மனிகா பஹ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மனரீதியாகச் சித்திரவதை செய்ததாகவும் இதுவே தற்கொலைக்குக் காரணம் என்றும் புனித் குடும்பம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து புனித்தின் குடும்பத்தினர், ”மனிகா பஹ்வா, அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி எனது சகோதரனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.
’உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும்’ என்று கூறி தனது சகோதரன் புனித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே புனித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், டெல்லியில் மேலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது.

