Delimitation bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. 278 பேர் மட்டுமே ஆதரவு!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நேற்று ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்தது. தொகுதி மறுவரை மசோதாவின்படி, தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 50% அதிகரித்து, மொத்தம் 816 இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
ஆனால், இந்த தொகுதி மறுவரையறை என்பது 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்த நிலையில், மத்தியரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொளைகையின் படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையில் பாதிக்கப்படும் எனவும் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்களின் "அரசியல் செல்வாக்கு" குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறி தென்மாநில முதல்வர்கள் (சந்திரபாபு நாயுடு தவிர) இந்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். நேற்று, திமுக, விசிக உள்ளடக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதா நகலை முதல்வர் ஸ்டாலின் தீ வைத்து எரித்ததும் பேசுபொருளாகியிருந்தது.
இந்த சூழலில் தான், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களுக்கான விவாதம் மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், அந்த விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்வதற்கு, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்த மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு அதாவது 326 எம்.பி-களின் ஆதரவு தேவை.
இந்த நிலையில் தான், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 உறுப்பினர் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறுவதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்த தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்திருக்கிறது. இது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

