ஏப்ரல் 21ல் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் “இந்துக்களின் வளங்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு காங்கிரஸ் பறித்து வழங்கும்” என்றும், ஏப்ரல் 24ல் மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் “மத அடிப்படையில் காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை வழங்க உள்ளது” என்றும் பிரதமர் பேசியதற்கு எதிராக பல தரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
எனினும் இதன் மீது எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை. எனவே பிரதமர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கு உத்தரவிட கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை கடந்த 10ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இவ்வகாரத்தில் தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், இம்மனுவை தள்ளுபடி செய்தது. “மனுதாரரின் புகாரை சட்டத்தின்படி சுயாதீனமாக மதிப்பிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.