டெல்லி: அரசுப்பள்ளிக்கு வெளியே மாணவருக்கு கத்திக்குத்து; தலைநகரில் அரங்கேறிய கொடூரம்!
டெல்லியில் அரசுப்பள்ளிக்கு வெளியே 14 வயது மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்படி, ஜனவரி 3 ஆம் தேதி டெல்லி ஷாகர்பூரில் உள்ள ராஜ்கியா பால் வித்யாலயா என்னும் அரசுப்பள்ளிக்கு வெளியே இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
சம்பவ தினத்தன்று, வழக்கப்போல பள்ளியில் கூடுதல் வகுப்புகளை முடித்துவிட்டு மாணவர் இஷூ வீடு திரும்ப விரைந்துள்ளார். அப்போதுதான், பள்ளியின் வாயிலில் இஷூவிற்கும் மற்றொரு மாணவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு இறுதியில் கைக்கலப்பாக மாறவே, 3-4 கூட்டாளிகள் இணைந்து இஷூவை கத்தியால் குத்தியுள்ளனர்.
அதில் இஷீ மரணமடைந்துள்ளார். சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், உடனடியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்புப் பணியாளர்கள் அடங்கிய காவலர்கள் தாக்குதல் நடத்தியவர்களை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் ஏழு நபர்களை கைது செய்தனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணையை கைதானவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இறந்த அந்த 14 வயது சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.