ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி!
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது இந்திய ராணுவம். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப்போட்டி ஒன்றினை மத்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கட்டுரைப் போட்டிக்கு, operation Sindoor - Redefining India's Policy Against Terrorism என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே கட்டுரை எழுதப்பட வேண்டும் என்றும் விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை தனது சமூக வலைதளப்பக்கத்தில், வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்புத்துறை அமைச்சகம் இளம் உள்ளங்களை தங்களின் குரல்களை எழுப்ப அழைக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் - பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மறுவரையறை செய்தல் என்ற தலைப்பில் இருமொழிக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கவும்.
போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பினையும் பெறலாம். போட்டி நாள்: ஜூன் 1 - 30-ம் தேதி வரை. ஒரு நபர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். கட்டுரைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு:mygov.in.” என்று தெரிவித்துள்ளார்.