கர்நாடகா | ஐடி சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே. ராய் தற்கொலை.. விசாரணைக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு!
கர்நாடகாவில் வருமான வரித்துறை சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார். உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ராயின் சகோதரர் கடன் சுமை இல்லை என தெரிவித்தார்.
கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் தொழிலதிபர் சி.ஜே ராய் கான்பிடண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரின் அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் ரிச்சண்ட் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அந்த சோதனையின் போது தொழிலதிபர் சி.ஜே ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சி.ஜே. ராயின் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கான கணக்குகளைத் தாக்கல் செய்ய பிப்ரவரி 4, 2026 ஆம் ஆண்டு வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. துபாயிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூரு திரும்பிய ராய், ஜனவரி 30 அன்று தனது அலுவலகத்திற்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். விசாரணைக்கு இடையே, "சில நிமிடங்களில் வருகிறேன்" என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "சி.ஜே. ராயின் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் சோதனை நடந்தது. அதற்கு விளக்கம் அளிக்க பிப்ரவரி 4 வரை அவகாசம் இருந்தது. தற்போது நடந்துள்ள இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து விரிவான ஆரம்பகட்ட விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவி்த்தார்.
தொடர்ந்து, சி.ஜே. ராயின் சகோதரர் சி.ஜே. பாபு கூறுகையில், "அவருக்குக் கடன் சுமையோ அல்லது வேறு மிரட்டல்களோ இல்லை. வருமான வரித் துறை தொடர்பான அழுத்தம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
57 வயதான இவர் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி வகித்ததோடு, பல மலையாளத் திரைப்படங்களையும் (மோகன்லால் நடித்த 'கேசனோவா' உட்பட) தயாரித்துள்ளார். சி.ஜே. ராயின் இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு பன்னேர்கட்டாவில் உள்ள அவரது ரிசார்ட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

