பாடகர் மர்ம மரண வழக்கு | போராட்டத்தில் வன்முறை.. சிங்கப்பூர் போலீசை சந்திக்கும் அசாம் போலீஸ் குழு!
அசாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பான வழக்கில் மர்மம் நீடிப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்திவந்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்குச் சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது திடீர் மரணம் ரசிர்களுக்கும், அசாம் மாநிலத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா, பாடகர் கார்க்கின் உறவினரும் காவல்துறை அதிகாரியுமான சந்தீபன் கார்க் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, பாடகரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேர் நேற்று சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது வெளியே போராட்டம் நடத்திய ரசிகர்கள் அவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.
மேலும், இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஜூபீன் கார்க் தொடர்பான கொலை வழக்கில் நீதி நிலைநாட்டுவதற்காக, அடுத்தகட்ட நடவடிக்கையாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அசாம் காவல்துறை கூடுதல் டிஜிபி மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) தலைவர் முன்னா குப்தா தலைமையில் ஒரு குழு அக்டோபர் 20ஆம் தேதி சிங்கப்பூர் செல்லவுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள், அஸ்ஸாம் போலீஸ் குழுவை அக்டோபர் 21ஆம் தேதி சந்திக்க உள்ளனர். "எங்கள் அன்புக்குரிய ஜூபீனுக்கு நீதி கிடைப்பதை நோக்கிய மற்றொரு படி இது. ஜூபீனுக்கு நீதி கிடைக்கும் என்ற எங்களின் கூட்டுத் தீர்மானம் தொடரும்" என்று முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு, ஜூபீன் கொலை வழக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.