அசாம் பாடகர் மர்ம மரண வழக்கு.. உறவினரான போலீஸ் அதிகாரி கைது.. சூடுபிடிக்கும் விசாரணை!
பாடகர் ஜூபீன் கார்க் இறந்தது தொடர்பாக அசாம் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) காவல்துறை அதிகாரியான அவரது நெருங்கிய உறவினரைக் கைது செய்துள்ளனர்.
அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்திவந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்குச் சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது திடீர் மரணம் ரசிர்களுக்கும், அசாம் மாநிலத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், பாடகர் ஜூபீன் கார்க் இறந்தது தொடர்பாக அசாம் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) காவல்துறை அதிகாரியான அவரது நெருங்கிய உறவினரைக் கைது செய்துள்ளனர். பாடகர் கார்க்கின் உறவினரான சந்தீபன் கார்க், அசாம் காவல் சேவை (APS) அதிகாரியாக உள்ளார்.
தற்போது காம்ரூப் மாவட்டத்திற்கான துணை கண்காணிப்பாளராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) பணிபுரிகிறார். பாடகர் சிங்கப்பூர் சென்றிருந்த சமயத்தில், அவருடன் சந்தீபன் கார்க் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இது ஐந்தாவது கைது ஆகும். சந்தீபனை கைது செய்வதற்கு முன்பு சிஐடி நான்கு நாட்கள் விசாரித்தது. சந்தீபன் கார்க்கின் தந்தைவழி மாமாவின் மகன் ஆவார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் காம்ரூப் (பெருநகர) மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.