சத்தீஸ்கர்: வெற்றிபெற்ற பாஜக... முதல்வர் யார்? போட்டியில் ராமன் சிங், அருண் சாவ்?

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமன் சிங், அருண் சாவ்
ராமன் சிங், அருண் சாவ்ட்விட்டர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

2000ல் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் 2003ஆம் ஆண்டு வரை மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னர் 15 ஆண்டுகள், அதாவது 2003 முதல் 2018ஆம் ஆண்டு வரை பாஜகதான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. 5 ஆண்டுகளாக ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகிருந்தன. இந்தசூழலில், யாரும் எதிர்பாராத திருப்புமுனையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

இதையும் படிக்க: "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு" - காங். தோல்வி குறித்து வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45சதவிகிதம் உள்ளனர். பழங்குடியின மக்கள் 31 சதவிகிதம் இருக்கின்றனர். இரண்டு பிரிவுகளும் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கின்றன. சத்தீஸ்கரில் அதிகம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வலுவாக உள்ள சாகு இனத்தைச் சேர்ந்த அருண் சாவ்- ஐ மாநில தலைவராக பாஜக தேர்ந்தெடுத்ததும் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது, 2020 முதல் 22ஆம் ஆண்டு வரை மாநிலத் தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய்-ஐ மாற்றி அருண் சாவ்-ஐதலைவராக தேர்ந்தெடுத்தது பாஜக.

ராமன் சிங்
ராமன் சிங்

தேர்தல் நடக்கும் 15 மாதங்களுக்கு முன்பே பாஜக சாதுர்யமாக இந்த செயலை முன்னெடுத்ததும் வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. பழங்குடியினத்தவர்களுக்கு பாஜக எதிரானது என காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. அதேநேரம், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங், அருண் சாவ் நியமனம் குறித்து வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: பாஜக வெற்றி.. முதல்வர் ரேஸில் யார்? ஓரங்கட்டப்படுவாரா சிவராஜ் சிங் சவுகான்?

இதுமட்டுமல்லாமல் கைராகரில் நடந்த இடைத்தேர்தலில், ராமன் சிங் தனது சொந்த மண்ணிலேயே பெரும் தோல்வியை தழுவியதும் பாஜக பலவீனமாக இருப்பதை உணர்ந்து சீரமைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியதும் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்திருக்கிறது. பாஜக ஆட்சியைக் கைப்பற்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்ததும் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் நிதியுதவி, 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பெண்களைக் கவரும் வகையிலான பல தேர்தல் வாக்குறுதிகளும் பாஜக வெற்றிபெற முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அருண் சாவ்
அருண் சாவ்

இந்தச்சூழலில், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் அறிவிக்கப்படுவாரா அல்லது அருண் சாவ் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க: ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்.. 3 மாநிலங்களில் அபார வெற்றி.. உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com