5 ரூபாய் மருத்துவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
சென்னையைச் சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராயபுரத்தில் 1971 முதல் மருத்துவ கிளினிக் நடத்தி வந்தவர் ஜெயச்சந்திரன். ஆரம்பக் காலத்தில் வெறும் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இருப்பினும், தன்னிடம் வரும் எந்த நோயாளியிடமும் அவர் கட்டாயமாக காசு கேட்பதில்லை. 44 வருடமாக தொடர்ந்த இவரது சேவை இறுதிக்காலம் வரையிலும் எந்தவித தொய்வுமின்றி நடந்தது. அதிலும், 24 மணி நேரமும் அவரது கிளினிக் திறந்திருக்கும். பின் காலத்தில் இவர் தனது கட்டணத்தை வெறும் 3 ரூபாய் உயர்த்தி ரூ.5 ஆக மாற்றினார். அதனால், கடைசி காலத்தில் அவர் 5 ரூபாய் மருத்துவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் மருத்துவர் ஜெயசந்திரன் உயிரிழந்தார். இவரது மறைவு ராயபுரம் மக்களையும் தாண்டி பலருக்கும் வருத்தத்தினை உண்டாக்கியது. பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். ராயபுரம் பகுதி முழுவதும் அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அவரிடம் மருத்துவம் பார்த்த இரண்டு தலைமுறை மக்கள் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிறரின் நலனுக்காக தூய்மையான வாழ்வை அர்ப்பணித்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன் என அவர் கூறியுள்ளார். மேலும், அவரைப்பற்றிய செய்தி ஒன்றினையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.