“பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 1 ரூபாய் கூட தரப்படவில்லை” - மத்திய அரசே கொடுத்த ஆதாரம்!
நடப்பாண்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கப்படாதது மத்திய அரசு அளித்த பதிலின் வாயிலாக தெரியவந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர், பேரிடர் நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதன்படி, மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில், 1,260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தவணை கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை. அதேநேரம், ஆந்திரா, அசாம், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இரண்டாம் தவணை வரை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, நிதி விடுவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் 276 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவிற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, சுமார் 3,454 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.