நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது.
அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிக்கப்படும்.
இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் முதலில் இதனை குற்றவழக்காக பதிவுசெய்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மஹுவா மொய்தா விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்து வந்த மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மஹுவாக்கு ஆதரவாக பேசியிருப்பதும் புதிய பொறுப்பு வழங்கியிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை: கேப்டனாக மின்னு ராணி நியமனம்!