இறுதி ஆகிறது பாஜக - பிஜூ ஜனதா தளம் கூட்டணி? டெல்லி செல்லும் விகே பாண்டின்!

பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி இறுதி ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்
பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்pt web

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஜூ ஜனதா தளம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இருகட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த கூட்டணி அமைய இருப்பதை சூசகமாகவே தெரிவித்துள்ளனர்.

இதன் ஒரு நடவடிக்கையாக, ஒடிசா முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், புவனேஸ்வரத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமான நவீன் நிவாசுக்கு சென்று, அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியிலும், பிஜூ ஜனதா தளம் உடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனையில் ஈடுபட்ட பிஜூ ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா, ஒடிசா மாநில மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு பிஜூ ஜனதா தளம் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில், பாஜக பிஜூ ஜனதா தளம் இடையிலான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் அங்கு அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. பாஜக எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் இருகட்சிகளும் கூட்டணி என செய்திகள் வருவது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, கடந்த செவ்வாய் கிழமை ஒடிசா பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் ஒடிசா வந்த நாள் என்பது ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் பிறந்தநாள். பிஜு பட்நாயக்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன் மற்றும் பிஜேடியின் அமைப்பு செயலாளருமான பிரணாப் பிரகாஷ் டெல்லி சென்று பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி கூட்டணி இறுதி செய்யப்பட்டால், மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜக 13 மக்களவைத் தொகுதிகளிலும், பிஜேடி 8 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com