பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசின் ‘குற்றவாளிகள் முன்விடுதலை’ தீர்ப்பு ரத்து - உச்சநீதிமன்றம்

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை குறித்தான குஜராத் அரசின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்twitter page

குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் சிலரால் பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்நேரத்தில் அவர் 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அன்றைய தினம் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உட்பட அவர் குடும்பத்தினர் 14 பேர் பில்கிஸ் பானு கண்முன்னேயே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின் அதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும் அவர்களது விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் பலரும் இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து வந்த சூழலில், கடந்த ஆண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானு வழக்கு: விடுதலையானவர்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர்களை கடுமையாக சாடிய நீதிமன்றம்!

இந்நிலையில் இன்று நீதிபதிகள் பிவி நாகர்தனா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், மனுக்கள் விசாரணைக்கு உகந்தது என தெரிவித்தது.

பின் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள்.

BilkisBano
BilkisBano

இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க, விசாரணை மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட இடமான மகாராஷ்ட்ராவே பொருத்தமான இடம், குஜராத் அல்ல. இத்தகைய தீர்ப்பின் மூலம் குஜராத் அரசு, மகாராஷ்ட்ரா அரசின் அதிகாரத்தை பறித்துள்ளது” என்று தெரிவித்தது. முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com