ராஜஸ்தான்: புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு!

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
பஜன் லால் சர்மா
பஜன் லால் சர்மாTwitter

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் முதல்வராகப் பதவியேற்றுள்ளனர்.

பஜன் லால் சர்மா
தெலங்கானா: முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

எனினும், பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

விஷ்ணுதியோ சாய், மோகன் யாதவ்
விஷ்ணுதியோ சாய், மோகன் யாதவ்

இதையடுத்து, இந்த 3 மாநிலங்களிலும் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வரைத் தேர்வுசெய்ய பாஜக, தலைமை மேலிடப் பொறுப்பாளர்களை நியமித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பழங்குடியின தலைவரான விஷ்ணுதியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று (டிச.11) மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வுசெய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று (டிச.12) ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பஜன் லால் சர்மா
3 மாநில முதல்வர் ரேஸ்: புதியவர்களுக்கு வாய்ப்பா? களமிறக்கப்பட்ட பாஜக மேலிடப் பார்வையாளர்கள்!

முன்னதாக, இன்று காலை ராஜஸ்தானில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே மற்றும் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதன்படி, வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் ஒருமனதாக பஜன் லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் பஜன்லால் சர்மா, சங்கனேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார்.

முன்னதாக வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. எனினும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களின் நன்மதிப்புகளைப் பெற முடியும் என பாஜக தலைமை திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. அதன்படி, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச ஆகிய இரண்டு மாநிலங்களிலும் புதிய முதல்வர்களே தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தானிலும் புதிய முதல்வரையே பாஜக தலைமை தேர்வுசெய்துள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை மேலும் வலுப்படுத்தவும், உட்கட்சியில் விரிசல் வராமல் வலுவாக வைத்திருக்கவும் முடியும் என பாஜக நினைப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தற்போது வெற்றிபெற்றிருக்கும் மூன்று மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமலேயே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com