அசாம் தேர்தல் வரலாறு| 33 வயது முதல்வரை கண்ட மாநிலம்.. காங்கிரஸின் நீண்ட வரலாற்றை மாற்றிய பாஜக!
அசாமில் சுதந்திரத்துக்கு பின் நீண்டகாலம் காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், 1978ல் ஜனதா, 1985ல் அசாம் கணபரிஷத் ஆட்சிக்கு வந்தன. தருண் கொகோய் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார். 2016 முதல் பாஜக ஆட்சி செய்து வரும் சூழலில், 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொள்கிறது.
சுதந்திரத்திற்கு பின் பிற இந்திய மாநிலங்களை போலவே அஸ்ஸாமிலும் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. இங்கு 1952, 1957, 1962, 1967, 1972 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வெற்றிபெற்றது. 1978இல் முதன்முதலாக அஸாமில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது.
நெருக்கடி நிலைக்கு பின் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளில் 2 முதல்வர்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. 1980இல் காங்கிரஸ் கட்சியின் அன்வாரா தைமூர் முதல்வரானார். இந்தியாவில் முதல்வர் பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையையும் பெற்றார் இவர். ஆனால் இவரது ஆட்சியும் 200 நாட்களில் கவிழ்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமலானது.
1985இல் நடைபெற்ற தேர்தலில் அசாம் கணபரிஷத் வெற்றிபெற்றது. 33 வயதான பிரஃபுல்ல குமார் மொகந்தா முதல்வர் ஆனார். இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பிரஃபுல்ல குமார் மொகந்தாவின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
2001இல் காங்கிரஸ் கட்சியின் தருண் கொகோய் அஸாம் முதல்வரானார். அடுத்த 15 ஆண்டுகளும் இவரே முதல்வராக நீடித்தார். அஸாமின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். இவரது மகன் கவுரவ் கொகோய்தான் அசாமில் தற்போது காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறரார்.
2016இல் நடைபெற்ற தேர்தலில் அஸாமில் பாஜக கால் பதித்தது. 2021 தேர்தலிலும் பாஜவே வென்றது, தற்போது தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அரியணை ஏற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

