ஆந்திரா | பார்சலில் வந்த ஆண் சடலம்... மூன்று பேரை கைதுசெய்த போலீசார்!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி பகுதியைச் சேர்ந்தவர் துளசி. புதிதாக வீடு கட்டிவரும் இவருக்கு கடந்த 19ஆம் தேதி பெரிய மரப்பெட்டி ஒன்று பார்சல் சர்வீஸில் வந்தது. வீட்டுக்குத் தேவையான மின் உபகரணங்களாகத்தான் இருக்கும் என்று நினைத்து அதனை திறந்த துளசி, உள்ளே அழுகிய நிலையில் சடலமொன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த சடலத்துடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்தது.
ஆந்திராவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல் துறையினர், சொத்து பிரச்னையில் துளசியை மிரட்டுவதற்காக அவரது சொந்த சகோதரி சுஷ்மா, அவரது கணவர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களே இந்த பார்சலை அனுப்பியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவசரத்துக்கு உடல் எதுவும் கிடைக்காததால், குடிபோதையில் தெருவில் கிடந்த கூலித்தொழிலாளி ஒருவரை கழுத்தை நெரித்துக்கொன்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கொலை மற்றும் மிரட்டல் வழக்குகளில் மூவரை கைது செய்திருக்கும் காவல் துறையினர் மேலும் சிலரைத் தேடிவருகின்றனர்.