நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில், தெலங்கானா மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ”இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
மேலும் அந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், ’பாஜக 400 இடங்களை வென்றால், இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள்’ எனக் குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தெலங்கானா முதல்வரும் காங்கிரஸ் தலைவரும் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட சிலர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், ‘இந்த வீடியோ போலியானது’ எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், சைபர் குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மே 1ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், விசாரணைக்கு வரும்போது அவரின் செல்போனை எடுத்து வரவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரேவந்த் ரெட்டி, ”டெல்லி காவல்துறையின் சம்மனுக்கு பயப்பட மாட்டேன். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரி போன்றவற்றை தொடர்ந்து தற்போது டெல்லி போலீசை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பயன்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.