6 மணி நேரம்.. 120 கி.மீ வேகம்.. அதானி குழுமம்.. உ.பியின் கங்கா விரைவுச் சாலையின் சிறப்புகள் என்ன?
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டமான கங்கா விரைவுச்சாலை, இன்று (ஏப்.29) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே அறிவோம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டமான கங்கா விரைவுச்சாலை, இன்று (ஏப்.29) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ரூ. 36,230 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கங்கா விரைவுச்சாலை, உத்தரப்பிரதேசத்தின் மிக நீண்ட விரைவுச்சாலையாகவும், இந்தியாவின் மிகப்பெரிய 'பசுமைப் புலம்' சாலைத் திட்டங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இது உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு மிக நீண்ட விரைவுச்சாலையாகும். அதாவது, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் (பிஜௌலி கிராமம்) முதல் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (ஜுதாபூர் தண்டு கிராமம்) வரை நீள்கிறது. தவிர, இந்த விரைவுச்சாலை மீரட், ஹாபூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, சம்பல், பதாவுன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 முக்கிய மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கை விரைவுச்சாலை வழித்தடத்தில், 519 கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, வாகனப் போக்குவரத்தையும் தடுக்கிறது.
மேலும், இது கங்கை மற்றும் ராம்கங்கா நதிகளின் குறுக்கே பிரம்மாண்ட பாலங்களைக் கொண்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் மற்ற முக்கிய விரைவுச்சாலைகளான பூர்வாஞ்சல், ஆக்ரா-லக்னோ மற்றும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலைகளுடன் இணைக்கப்பட்டு, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு பெரிய சாலை வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஒரு சாலையாக மட்டும் செயல்படாமல், ஒரு தொழில், தளவாட மற்றும் மேம்பாட்டு வழித்தடமாகவும் செயல்பட வேண்டும் என்ற மிக விரிவான லட்சியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சுமார் 594 கி.மீ. கொண்ட இந்தச் சாலையில், வாகனங்கள் மணிக்கு அதிகபட்சம் 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதி உண்டு. இதன்மூலம், மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையிலான பயண நேரத்தை 6 மணி நேரத்திற்குள் கடக்க முடியும். ஆரம்பத்தில் 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ள இது, எதிர்காலத்தில் தேவைக்கேற்ப 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவுச்சாலையின் நான்கு பிரிவுகளில் மூன்றை அதானி குழுமம் அமைத்துள்ளது. மொத்தம் 594 கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையில், 464 கிலோமீட்டர் தூரத்தை இக்குழுமம் கட்டமைத்துள்ளது. மேலும், இந்தச் சாலையோரப் பகுதியில், 12 ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் தளவாட மையங்களை (IMLCs) அமைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 6,507 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ. 47,000 கோடி மதிப்பிலான 987 முதலீட்டு முன்மொழிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

