உ.பி. | 22 வயது இளைஞருக்கு மணப்பெண்ணுக்குப் பதில் தாயாரை திருமணம் செய்தவைத்த சம்பவம்!
திருமணம் என்பது மனித கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனாலும் அத்தைய திருமணத்தில் மோசடிகள் நடப்பதும் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மணப்பெண்ணுக்குப் பதில் அவருடைய விதவைத் தாயாரைக் கட்டிவைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்மபுரியைச் சேர்ந்தவர், முகமது அசீம் (22). இவருக்கு ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மந்தாஷாவுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை, மந்தாஷாவின் சகோதரர் நதீம் மற்றும் அவரது மனைவி ஷைதா ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுடைய திருமணம் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்ணின் முக்காட்டைத் தூக்கி மணமகன் முகமது அசீம் பார்த்துள்ளார். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மந்தாஷாவுக்குப் பதில் அவரது விதவைத் தாயார் மணக்கோலத்தில் இருந்துள்ளார். இதனால், தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு மணப்பெண்ணின் குடும்பத்தார் மீது அசீம் போலீஸில் புகார் அளித்தார்.
மேலும், இத்திருமண விழாவுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இருதரப்பிலும் சமாதானம் அடைந்திருப்பதாகவும், அசீம் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.