45 வயதிற்குப் பின் குடலில் ஏற்படும் மாற்றம்.. leaky gut அபாயம்!
மனித உடலில் செரிமானம், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் 'குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை 45 வயதிற்குப் பிறகு கணிசமாகக் குறையத் தொடங்குவதாகப் புதிய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்த நடுத்தர வயதில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் உடலியல் மாற்றங்களால் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குறைந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன. இதனால் செரிமானக் குறைபாடு, வயிற்று உப்பசம் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.மேலும், குடலின் பாதுகாப்பு அடுக்கு பலவீனமடைந்து நச்சுக்கள் நேரடியாக ரத்தத்தில் கலக்கும் லீக்கி கட் (Leaky Gut) என்ற நிலை உருவாகி, அது நாள்பட்ட உடல் வீக்கம், மூட்டு வலி மற்றும் ஞாபக மறதிக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், இந்த மாற்றங்களில் 30 சதவீதம் மட்டுமே இயற்கையான முதுமையால் ஏற்படுவதாகவும், மீதமுள்ள 70 சதவீத மாற்றங்கள் நம் வாழ்க்கை முறை சார்ந்தவை.
எனவே தினமும் 30 முதல் 35 கிராம் நார்ச்சத்து மிக்க உணவுகள், இட்லி, தோசை, தயிர் போன்ற புளித்த பாரம்பரிய உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தினசரி 30 நிமிட நடைப்பயிற்சியுடன் கூடிய 7 முதல் 8 மணி நேரச் சீரான தூக்கம் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நடுத்தர வயதிலும் முதுமையைத் தள்ளிப்போட முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

