ஆஸி. : ஆய்வகத்திலிருந்து காணாமல் போன 300 கொடிய வைரஸ் மாதிரிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து நூற்றுக்கணக்கான கொடிய வைரஸ்களின் மாதிரிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான விசாரணையை தொடங்க ஆஸ்திரேலிய பொது சுகாதாரத்துறைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் உள்ள பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்திலிருந்து ஹென்ட்ரா வைரஸ், லிஸ்ஸா வைரஸ், ஹாண்டா வைரஸ் உள்ளிட்ட பல தொற்று வைரஸ்களின் 323 மாதிரிகள், காணாமல் போயிருப்பதாக, டிசம்பர் 9 ஆம் தேதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாதிரிகள் கடந்த ஆகஸ்ட் 2023 முதலே காணவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதுதான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காணாமல்போன வைரஸ் மாதிரிகள் திருடப்பட்டுள்ளதா அல்லது அழிக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் திமோதி நிக்கோல்ஸ் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய போது,"உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதும், தொற்று வைரஸ் மாதிரிகள் காணாமல் போவதும் மிகவும் தீவிரமான விஷயம். இது மீண்டும் நடக்காதவாறு குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை இதை விசாரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஹாண்டா வைரஸ் மற்றும் லிஸ்ஸா வைரஸ் எவ்வளவு கொடியவை?
ஹெண்ட்ரா என்பது, ஒரு ஜூனோடிக் (விலங்கிலிருந்து மனிதனுக்கு) வைரஸ் தொற்றாகும், இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லிசா வைரஸ், ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவாகும். இருப்பினும், சமூகத்திற்கு ஆபத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இவற்றின் மாதிரிகள் காணாமல் போயிருப்பது, உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் அந்நாட்டு அரசாங்கம் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது.