"பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம்" - பி.எம்.ஜே ஆய்வு!
பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிற்பது அதிகரித்துவருவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், 30 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 14 பேரில் ஒருவருக்கு 'முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்' ஏற்படுவதாக 'பி. எம்.ஜே குளோபல் ஹெல்த்' இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 45 வயதுக்கு முன்பே ஏற்படும் இந்த நிலை, நகர்ப்புறங்களை விட கிராமப்புறப் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த ஆய்வில் இந்தியாவின் 3 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஐரோப்பியப் பெண்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்பு 34 சதவீதம் அதிகமாக உள்ளது. இளம் வயதிலேயே மாதவிடாய் நிற்பதால் பெண்களுக்கு இதய நோய், எலும்பு பலவீனம், மனச்சோர்வு மற்றும் ஆரம்பகால மரண ஆபத்துகள் அதிகரிக்கின்றன.
முன்கூட்டிய திருமணங்கள், போதிய ஊட்டச்சத்தின்மை மற்றும் சுகாதாரக் குறைபாடுகளே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனவே, வளரும் நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தி, பெண்களுக்கான ஆரோக்கியத் திட்டங்களில் மாதவிடாய் மேலாண்மையையும் இணைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

