புதுச்சேரி| மக்களே உஷார்.. பக்கவிளைவு காரணமாக 4 மாத்திரைகளுக்குத் தடை!
புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை, பக்கவிளைவுகள் காரணமாக தரமற்றதாக கண்டறியப்பட்ட டெபேராசிராக்ஸ், கிளிபிசைடு, டைக்ளோபெனாக் சோடியம், ருமலின் ஆகிய நான்கு மாத்திரைகளின் விற்பனையை தடை செய்துள்ளது. சோதனையில் தரம் குறைபாடு உறுதியானதால், மருந்தகங்கள் இம்மருந்துகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளன. மக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மாத்திரைகளின் விற்பனைக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது. உடலில் உள்ள அளவுக்கதிகமான இரும்புச் சத்தைக் குறைக்கப் பயன்படும் 'டெபேராசிராக்ஸ்' (Deferasirox), நீரிழிவு நோய்க்கான 'கிளிபிசைடு' (Glipizide), வலி நிவாரண மாத்திரைகளான 'டைக்ளோபெனாக் சோடியம்' (Diclofenac Sodium) மற்றும் 'ருமலின்' (Rumalin) ஆகிய 4 மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இவை தரமற்றவை என்று கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

